Rock Fort Times
Online News

திருச்சியில் ரூ.34 கோடி மதிப்பீட்டில் 2 மாணவர் விடுதிகள்….

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல்...

திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் அருகில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் மாணவர் விடுதிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினையும், திருச்சி ராஜாகாலனி தாட்கோ அலுவலக வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மாணவர் விடுதிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினையும் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இன்று ( 30.09.2023 ) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் , தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க பள்ளிகளையும், விடுதிகளையும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப புதிதாக விடுதிகள் தேவைப்படுகிறது. அதனடிப்படையில் இந்த நிதியாண்டில் திருச்சி, மதுரை, கோவை மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் 100 கோடி மதிப்பீட்டில் மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்ட தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி திருச்சி மாவட்டம், பஞ்சப்பூரில் 350 மாணவர்கள் தங்கும் வகையில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் ஒரு விடுதியும், ராஜாகாலனியில் சுமார் 250 மாணவர்கள் தங்கும் வகையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மற்றொரு விடுதியும் என 34 கோடி மதிப்பீட்டில் 2 விடுதிகள் கட்டப்படவுள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு 1 வருட காலத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மிருணாளினி, தாட்கோ செயற்பொறியாளர் காதர்பாட்ஷா, பழங்குடியினர் நல அலுவலர் கீதா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்