Rock Fort Times
Online News

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கப்படுமா? சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் பதில்..!

தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் நித்தியானந்தம், ரேஷன் கடைகளில் பில்லிங் போடும்போது சர்வர் வேலை செய்யவில்லை என்றும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், “தமிழ்நாடு முழுவதுமே ரேஷன் கடைகளில் பில்லிங் போடுவதில் நெட்வொர்க் பிரச்சினை காரணமாக சில நேரங்களில் சிக்கல் ஏற்படுகிறது. இதனைச் சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், எந்தெந்த இடங்களில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உள்ளன என்பதை கண்டறிந்து, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி பெரும்பாலும் பொள்ளாச்சி பகுதியில் மட்டுமே உள்ளது. மற்ற மாவட்டங்களில் போதிய அளவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி இல்லை. தற்போது மாதத்திற்கு 2 கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, ஆண்டுக்கு 24 கோடி லிட்டர் பாமாயில் தேவைப்படுகிறது. கடந்த காலங்களில் பாமாயிலுக்கு பதிலாக வேறு வகையான எண்ணெயை ரேஷன் கடைகளில் வழங்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், மாற்று எண்ணெய்க்கான கொள்முதல் தேவை அதிகமாக இருப்பதுடன், போதிய உற்பத்தி இல்லாததால் தொடர்ந்து சீராக வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதும் தெரியவந்தது. எனவே, தற்போது மாற்று எண்ணெய் வழங்கப்படவில்லை. இருப்பினும், வரும் காலங்களில் பிற மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட மாற்று எண்ணெய்கள் போதிய அளவில் கிடைக்கிறதா என்பது குறித்து ஆய்வுசெய்து, சாத்தியக்கூறு இருந்தால் அவற்றை ரேஷன் கடைகளில் வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்