உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் சட்டப்பேரவையில் பேசியதாவது, ஈரான் போர் காரணமாக வாகன எரிவாயு விலை ஏற்றத்தால் போக்குவரத்து செலவு உயர்வு, அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, அதிகளவில் வெங்காய உற்பத்தி செய்யக்கூடிய மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து வெங்காய வரத்து குறைந்ததன் காரணமாக வெளிச்சந்தையில் வெங்காயம் கிலோ 56 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏழை எளிய நடுத்தர மக்களின் நலனை கருத்தில்கொண்டு, வெங்காய விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையம், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக முதற்கட்டமாக 1000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு நியாயமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நகர்ப்பகுதியில் ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதான விற்பனை பண்டகசாலைகள் வழியாக அமுதம் அங்காடிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள நியாயவிலை கடைகள் மூலமாக விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. நியாயவிலை கடைகளில், வருகிற 3ம் தேதி முதல் 1 கிலோ வெங்காயம் ரூ. 35க்கு வழங்கப்படும்” என தெரிவித்தார்.
கோதுமை மாவு,
இதேபோல ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு கோதுமை மாவு, கிலோ ரூ.15-க்கு வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வெளிச்சந்தையில், கோதுமை மாவு விலை சராசரியாக, ரூ.60 வரை உள்ளது. கடந்த மாதம் 5-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், ‘பொது வினியோக திட்டத்தில் பாக்கெட்டில் கோதுமை வழங்கும் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்படும்’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோதுமை மாவு, கிலோ ரூ.15-க்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.