Rock Fort Times
Online News

போர் பதற்றம்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் லாக்டவுன், ரயில் சேவைகள் ரத்து…!

எல்லையில் நிலவும் பதற்றத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ” ஆபரேஷன் சிந்தூர்” எதிரொலியாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதைடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் முழு ஊரடங்கான லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ஜெய்சால்மர் பகுதியில் மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. பார்மர், ஜெய்சால்மர் இடையேயான ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.பார்மர், ஜோத்பூர், முனாபாவ் இடையேயும், பகத் கி கோதி – பார்மர் மற்றும் முனாபாவ் -பார்மர் இடையே இருபுறமும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜெய்ப்பூர், ஜெய்சால்மர் எக்ஸ்பிரஸ் ரயில் பிகானர் வரை பகுதியாக குறைக்கப்பட்டு உள்ளது. ஜெய்சால்மருக்கு பதிலாக பிகானரில் இருந்து ரயில் சேவை இயக்கப்படும். இதேபோன்று, பாகிஸ்தானை ஒட்டிய ஜம்மு, பஞ்சாப் எல்லையில் இனி இரவில் ரயில்கள் இயங்காது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்