இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக வங்காளதேசத்தில் கடந்த ஒருமாதமாக போராட்டம் நடந்து வருகிறது. தற்போது அது வன்முறை, கலவரமாக மாறி உள்ளது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டனர். அதற்குமுன்பே, ஷேக் ஹசீனா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ராணுவ ஹெலிகாப்டரில் இந்தியாவில் தஞ்சமடைந்தார். தற்போது அவர் லண்டனில் தஞ்சம் அடைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், குல்னா பிரிவில் உள்ள நரைல்-2 தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஷ்ரஃபே மோர்தசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் வங்காள தேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு, தொடர்ந்து இரண்டாவது முறையாக எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். இவர் வங்காளதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தபோது 117 போட்டிகளுக்கு தலைமை தாங்கியிருக்கிறார். இவரின் கிரிக்கெட் வாழ்க்கையில், 390 விக்கெட்களை வீழ்த்தி, 2,955 ரன்களை எடுத்திருக்கிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபிறகு, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கில் சேர்ந்து 2018-ல் அரசியலில் நுழைந்தார். அப்போதுமுதல் எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.