Rock Fort Times
Online News

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்பு மனு நிராகரிப்பு: மின் கோபுரத்தில் ஏறி ஓய்வுபெற்ற அரசு ஊழியர் போராட்டம்…!

திருச்சி உறையூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பிறகு சமூக செயல்பாட்டாளராக இருந்து வருகிறார். இவர், நடந்து முடிந்த எம்பி தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு 675 வாக்குகள் பெற்றார். இந்தநிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளாராக போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தார். வேட்பு மனு பரிசீலனையின் போது அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதனை கண்டித்து இன்று(26-06-2024) காலை திருச்சி நீதிமன்றம் எம்.ஜி.ஆர் சிலை அருகே உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தில் ராஜேந்திரன் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்த தகவலின்பேரில் கண்டோன்மென்ட் தீயணைப்புத் துறையினர், கண்டோன்மென்ட் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா, திருச்சி மேற்கு தாசில்தார் விக்னேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும் சமாதானம் அடையாத ராஜேந்திரன் தனது போராட்டத்தை தொடர்ந்தார். இதன் காரணமாக அங்கு கூட்டம் கூடியது. இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் சிலர் காவல்துறை, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் டவரின் மீது ஏறி அவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர். பின்னர் அவரை கண்டோன்மென்ட் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 2 மணி நேரமாக இந்த போராட்டம் நீடித்ததால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்