திருச்சி காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சில்லறை விற்பனையில் ஈடுபடுவதை நிறுத்த நடவடிக்கை- மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு…!
திருச்சி மாவட்டத்தின் முக்கிய வணிக பகுதியாக காந்தி மார்க்கெட் விளங்கி வருகிறது. இங்கு காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், பூக்கள், இறைச்சி வகைகள் உட்பட அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் திருச்சி மட்டுமல்லாது தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கரூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொது மக்களும், வியாபாரிகளும் இங்கு வந்திருந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இங்கு மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் மொத்த வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் கொரோனா காலத்திற்கு பின் சில்லறை விற்பனையிலும் ஈடுபட்டு வருவதால், சில்லறை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் சில்லறை வியாபாரிகள் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடுகிறது. எனவே அதனை முறைப்படுத்த வேண்டும், மொத்த வியாபாரிகள் சில்லறை விற்பனையில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும், அதற்கு மொத்த வியாபாரிகளையும் சில்லறை வியாபாரிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி திருச்சி காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரிகள் சங்கத்தினர், காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் குறைதீர்க்கும் நாளான இன்றைய தினம்( திங்கட்கிழமை) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மார்ச் 1-ம் தேதி காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரிகள் தங்களின் கடைகளின் முன்னால் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிப்போம் என மனு அளித்தவர்கள் தெரிவித்தனர்.
Comments are closed.