Rock Fort Times
Online News

திருச்சியில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சிறை நிரப்பும் போராட்டம்- 200 பேர் கைது…!

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு போக்குவரத்து தொழிலாளர் கடன்களை உடனே அடைக்க வேண்டும். 30 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க திருச்சி, கரூர் மண்டலம், அரசு விரைவு போக்குவரத்து சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோர் சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் சிலை ரவுண்டானா அருகில் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க திருச்சி, கரூர் மண்டல தலைவர் சிங்கராயர் தலைமை தாங்கினார். சிஐடியூ மாநகர் மாவட்ட பொருளாளர் மணிகண்டன், சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன், விரைவு போக்குவரத்து கழக சங்க மாநில தலைவர் அருள் தாஸ், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க மண்டல பொதுச் செயலாளர் மாணிக்கம், மண்டல
துணைத் தலைவர் கருணாநிதி, பொருளாளர் முத்துக்குமார், சி ஐ டி யு அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் மண்டல பொருளாளர் ராமதாஸ் மற்றும் மத்திய சங்க நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்கள் அனைவரையும் கைது செய்தனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பிறகு அவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக பஸ் நிலையத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்