தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் நாளை(20-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் சசிகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2025 – 26ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8,82,806 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 25,801 பேர், சிறைவாசிகள் 395 பேர் என மொத்தம் 9,09,002 தேர்வர்கள் 4,219 தேர்வு மையங்களில் தேர்வெழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 13 ம் தேதி முதல் 20 ம் தேதிக்குள் முடிக்கப்பட்டன. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 20ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் பதிவெண்,
பிறந்த தேதியை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம். தவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். வாட்ஸ்அப் செயலியில் 7845252525 என்ற எண்ணை சேமித்து வைத்து அந்த எண்ணில் Hi எனப் பதிவிட்டு, பின்னர் வரும் தகவல்கள் மூலமும் அறிந்து கொள்ளலாம். தேர்வர்களுக்கு தேர்வு முடிவுகள் குறித்த ஐயங்கள் ஏதேனும் இருப்பின் 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.