Rock Fort Times
Online News

திருச்சியில் ஜவுளிக்கடை சூப்பர்வைசர் எரித்துக் கொலை?- போலீசார் தீவிர விசாரணை…!

திருச்சி, வயலூர் ரோடு உய்யகொண்டான் திருமலை அருகே  எம்.எம்.நகர் கரைப் பகுதியில் இருசக்கர வாகனத்துடன் ஆண் ஒருவர் இன்று(22-09-2024) காலை எரிந்த நிலையில் கிடந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  அதன்பேரில், திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.  பின்னர், எரிந்த நிலையில் கிடந்த அந்த ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் அவர் யார்? என்பது குறித்து மோட்டார் சைக்கிளின்  பதிவெண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.  விசாரணையில்,  சடலமாக கிடந்தவர் உய்யகொண்டான் திருமலை தெற்கு தெருவை சேர்ந்த சரவணகுமார் (வயது 38) என்பதும்,  திருச்சியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் சூப்பர்வைசராக  .வேலை பார்த்து வந்ததும், திருமணமான இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளதும் தெரிய வந்தது. அவர் கடன் சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.  இதனால் அவர்  மண்எண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் எரித்துக் கொலை செய்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம்  உய்யகொண்டான் திருமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்