திருச்சி திருவானைக்காவல் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் சாலையான காந்தி ரோடு திருப்பத்தில் உள்ள மாரியம்மன் கோயில் அருகில் இன்று(26-04-2024) அதிகாலை நடுரோட்டில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. பள்ளம் வெகு ஆழமாக இருந்ததால் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பள்ளத்தை சுற்றி தடுப்பு பேரிக்காட்டை வைத்தனர். மேலும், இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அப்பகுதியில் கனரக வாகன போக்குவரத்தை நிறுத்தினர். பின்னர் பள்ளம் ஏற்பட்ட பகுதியை ஊழியர்கள் மூலம் பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைத்து வருகின்றனர்.

கழிவுநீர் செல்லும் பெரிய குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அதிலிருந்து வெளியேறும் அதிக அழுத்த நீரோட்டத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு இந்த பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைஅடுத்து அந்த இடத்தை சுற்றிலும் அகலப்படுத்தி மீண்டும் புதிய கழிவுநீர் குழாய் பதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஸ்ரீரங்கம் செல்லும் அனைத்து பேருந்துகளும் மாம்பழச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு அம்மா மண்டப சாலை வழியாக சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிறைவடைய இரண்டு நாட்கள் ஆகும் என்று தெரிகிறது. ஏற்கனவே, இதேபோன்று பள்ளம் ஏற்பட்ட இடத்திற்கு சற்று தொலைவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுபோன்று பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.