புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியராகப் பெருமாள் (வயது 58) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், அதே பள்ளியில் படிக்கும் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவிகளிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
மேலும், அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் பொறுப்புத் தலைமை ஆசிரியர் பெருமாளை திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பொறுப்புத் தலைமை ஆசிரியர் பெருமாளை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.