திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சியில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு சுமார் 15 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், சுமார் 26 சிறு தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த நீர்த்தேக்க தொட்டிகள் சமீப காலமாக சுத்தம் செய்யப்படவில்லை. இதனால், அதில் உள்ள தண்ணீர் அசுத்தமாக காணப்படுகிறது. சிலவற்றில் புழுக்கள் உள்ளன. இந்த குடிநீரை பயன்படுத்துவோருக்கு டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து பூனாம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் தொட்டி இயக்குபவர்கள் கூறுகையில், குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு வழக்கமாக ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். அதனை 6 மாதங்களாக வழங்கவில்லை. இதனால், தொட்டிக்கு சுண்ணாம்பு அடித்தல், ப்ளீச்சிங் பவுடர் கலப்பது, தொட்டியை சுற்றி சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளவில்லை என்று கூறினர். இதுதொடர்பாக பூனாம்பாளையம் ஊராட்சி தலைவர் ஹரிகிருஷ்ணனிடம் கேட்டபோது, பஞ்சாயத்தில் பணம் இல்லை என்று பதில் அளித்தார். இதுசம்பந்தமாக மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் , ஊராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.