எரிபொருள் விலையேற்றத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டிக் கொண்டு இருக்கும் சூழலில் சமையல் எரிவாயு விலை உயர்வும் பொது மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கூடுதல் சுமையாக, தற்போது அரிசி விலையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வெளிநாடுகளுக்கு நெல் ஏற்றுமதி அதிகரித்துள்ளதால் தமிழ்நாட்டிற்கு நெல் வரத்து குறைந்துள்ளதாக கூறும் அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தினர் அரிசி விலை கிலோவிற்கு ரூ.2 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் நெல் கணிசமான அளவு பொது விநியோகத் திட்டத்திற்காகவே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆந்திரா, கர்நாடகா, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவு வந்து கொண்டு இருந்த அரிசி திடீரென குறைந்துள்ளதால் தஞ்சாவூரில் அரிசி விலை கிலோவிற்கு ரூ. 6 அதிகரித்துள்ளது. இதன்மூலம் கர்நாடகா பொன்னி அரிசி ரூ.44-ல் இருந்து ரூ. 50 ஆகவும், கடந்த நவம்பரில் அறுவடை செய்யப்பட்ட பழைய அரிசி ரூ. 50-ல் இருந்து ரூ.56 ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னையிலும் ரகங்கள் வாரியாக அரிசி மூடைகளின் விலை அதிகரித்துள்ளது. பொன்னி, பாசுமதி, பச்சரிசி உள்ளிட்ட அனைத்து ரகங்களும் விலை உயர்ந்துள்ளதால் ஒரு மூடைக்கு ரூ. 300 விலையேற்றம் காணப்படுவதாக வணிகர்கள் கூறுகின்றனர். அரிசி விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.