Rock Fort Times
Online News

பழுதடைந்த திருச்சி ஜி கார்னர் பாலம் சீரமைப்பு பணி நிறைவு-விரைவில் போக்குவரத்துக்கு அனுமதி…!

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் அருகே இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு பாலத்தின் தூண் பகுதியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால், அந்தப்பகுதியில் உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. அருகில் உள்ள மற்றொரு பாலத்தின் வழியாக தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற ஊர்களுக்கும், துவாக்குடி, திருவெறும்பூர் போன்ற ஊர்களுக்கு நகர பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்த இடத்தில் வாகனங்கள் ஊர்ந்து தான் சென்று வருகின்றன. இதனால், தினம் தினம் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ரயில்வே நிர்வாகத்தினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஒரு மாதத்துக்கு மேலாக பால சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ஐ.ஐ.டி., திருச்சி என்.ஐ.டி., பொறியியல் வல்லுநர்கள் ஆலோசனையின் பேரில் பாலப்பணிகள் விறுவிறுப்பாக நடந்தன. இந்நிலையில் 50 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற பால சீரமைப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. பாலத்தின் உறுதித் தன்மையை ஐஐடி பேராசிரியர் அழகு சுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சீரமைக்கப்பட்ட பாலத்தில் வாகன போக்குவரத்தை தொடங்கலாமா? என அவர் அறிக்கை சமர்ப்பித்த பின் மீண்டும் இந்த பாலத்தில் போக்குவரத்து தொடங்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்