பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்காக நாளை(18-04-2026) தமிழகம் வருகிறார். கோவையில் உள்ள கொடிசியா மைதானம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று, கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு உரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள், முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு இருக்கைகள், குடிநீர், கழிப்பறை, வாகன நிறுத்தும் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் வருகையையொட்டி கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், மத்திய பாதுகாப்புப் படை மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். நகரின் முக்கிய இடங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் சோதனைகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நகரின் பல பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும், விதிகளை மீறுவோருக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.