சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை கூடுதல் இயக்குனர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் (23-04-2026) நடக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 135 பி-ன் விதிகளின்படி, அனைத்து வகை தொழிலாளர்களும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக, வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அந்தந்த மாவட்டங்களில் அமைந்துள்ள அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் நிர்வாகங்கள், மேற்கண்ட விதியை முழுமையாகக் கடைப்பிடித்து தகுதி வாய்ந்த அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும். மேற்கண்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறும் பட்சத்தில், தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் இயக்குனரகத்தால் அமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகளுக்கு அது குறித்து தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.