திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பக்தர்கள் வருகை தந்து சுவாமியை தரிசித்துச் செல்கின்றனர். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதையை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அடிவாரத்தில் இருந்து மலைக் கோவிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்று வரும் வகையில் ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் சேவைகள் உள்ளன. இதில், பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார் சேவையை விரும்புகின்றனர். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரோப் கார் இயக்கப்படுகிறது. மதியம் 1-30 மணி முதல் 2.30 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறும். அதேபோல மாதத்திற்கு ஒரு நாள், வருடத்துக்கு ஒருமுறை 40 நாட்கள் என ரோப் காரில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். அப்போது அதன் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு பழனி முருகன் கோவில் ரோப் காரில் வருடாந்திர பராமரிப்பு பணி இன்று(07-10-2024) திங்கட்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி, ரோப் கார் சேவை இன்று முதல் 40 நாட்கள் நிறுத்தப்படுகிறது. எனவே, பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை மற்றும் மின் இழுவை ரயில் சேவை ஆகியவற்றை பயன்படுத்தி மலைக்கோவில் சென்று வரலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.