கர்நாடகா – தமிழகம் இடையே காவிரி நீர் விவகாரம் தீராத பிரச்சனையாக உள்ளது. எங்களுக்குரிய தண்ணீரை திறக்க வேண்டும் என தமிழகம் கூறிவரும் நிலையில், கர்நாடகா மறுத்து வருகிறது. சமீபத்தில் டில்லியில் நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்கள் தினமும் வினாடிக்கு 3,500 கன அடி நீரை திறந்து விட வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கர்நாடக முதல்வர் சிவக்குமார் அவசர ஆலோசனை நடத்தினார். பிறகு மழை பெய்யாத காரணத்தினால், எங்கள் மாநிலத்தில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட இயலாது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட உள்ளோம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
தண்ணீர் திறக்க உத்தரவு,
இந்நிலையில், இன்று( ஜூலை 30) காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆலோசனைக்கு பிறகு, காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டபடி அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திறகு தினமும் வினாடிக்கு 3,500 கன அடிநீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
பிரதமரிடம் முறையீடு,
இதனிடையே, டில்லியில் நிருபர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சிவக்குமார், இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளோம். வருகிற ஞாயிற்றுக்கிழமை , காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். தமிழக முதல்வர் கர்நாடகா வருகிறார். அப்போது காவிரி நீர் குறித்து விவாதித்து இரு மாநில நலனுக்கு ஏற்ப தீர்வு காண நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.