செங்கல்பட்டு அருகே பழுதாகி நின்ற லாரி மீது அரசு மற்றும் தனியார் பஸ்கள் அடுத்தடுத்து மோதல்: 4 பேர் பலி- 20 பேர் படுகாயம்…!
விழுப்புரத்தில் இருந்து சென்னை பூந்தமல்லிக்கு கிரானைட் கற்களை ஏற்றி வந்த லாரி ஒன்று பழுதாகி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில், ஆம்னி பஸ்சின் முன்புறம் நொறுங்கியது. இந்த விபத்தில் ஆம்னி பஸ்ஸில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இந்நிலையில் விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் மீது முசிறியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பஸ் மோதியது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், காயமடைந்த பயணிகளை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிட்டதட்ட 3 மணி நேரத்திற்கு பிறகே போக்குவரத்து சீரானது. 

Comments are closed.