Rock Fort Times
Online News

திருச்சியில் நள்ளிரவில் பயங்கரம்: கழுத்தை அறுத்து மாணவர் படுகொலை…

3 பேரிடம் போலீசார் விசாரணை...

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கொடியாலம் மேலத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னன். இவரது மகன் கோகுல் (வயது 19). இவர் திருச்சி திருவெறும்பூரில் உள்ள அரசு ஐடிஐயில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று ( 26.09.2023 ) வழக்கம்போல மாணவர் கோகுல் மற்றும் அவரது குடும்பத்தினர் சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது. இதனால், வீட்டில் இருந்தவர்கள் கதவுகளை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த கோகுலின் கழுத்தை கொடூரமாக அறுத்தனர். இதனால், வலியால் துடித்த அவர் அலறியவாறு எழுந்து ஓட முயன்றார். ஆனால், வீட்டு வாசலில் மயங்கி விழுந்தார். கோகுலின் அலறல் சத்தம் கேட்டு சகோதரர் திடுக்கிட்டு எழுந்து வெளியே ஓடி வந்துள்ளார். ஆனால், கோகுல் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து விட்டது தெரிய வந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட கோகுல் மீது அடிதடி வழக்குகள் உள்ளதும், இதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததா? அல்லது கோவில் விழாவில் ஏற்பட்ட மோதலில் கொலை நடந்ததா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக 3 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாணவனை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்