Rock Fort Times
Online News

சமயபுரத்தில் பெண்ணை கொலை செய்து முட்புதரில் வீசியதாக கொத்தனார் கைது..!

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி சென்னை- திருச்சி பைபாஸ் சாலையோர முட்புதரில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் சமயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பெண்ணின்
உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அந்த பெண் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வந்தனர். அவரது கழுத்துப் பகுதியில் காயங்கள் இருந்ததால் அவரை யாரோ கொலை செய்து முட்புதரில் வீசி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக லால்குடி டிஎஸ்பி தினேஷ்குமார் உத்தரவின்படி சமயபுரம் இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் அந்தப் பெண் சடலமாகக் கிடந்த இடம் மற்றும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டனர். அதில், ஜனவரி 2ம் தேதி இரவு அப்பெண்ணுடன் ஒரு நபர் நடந்து செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இதையடுத்து 3 ம் தேதி அன்று அதே நபர் சமயபுரம் நால் ரோடு பகுதியில் தனியாக நடந்து செல்லும் காட்சியை கொண்டு அவரது புகைப்படத்தை வைத்து விசாரணை நடத்தினர்.
அந்த நபர் திருப்பூர் பேருந்து நிலையத்தில் இருப்பதை உறுதி செய்து கொண்ட தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை பிடித்து சமயபுரம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சேலம் மாவட்டம், தலைவாசல் தாலுகாவிற்கு உட்பட்ட வீரகனூர் கிராமத்தை சேர்ந்த சிவா என்கின்ற விக்னேஷ் (32) என்பது தெரியவந்தது. இவர் திருமணமாகாதவர். இவர் தனது அண்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சொந்த வீட்டிற்கு செல்வது இல்லை. இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய விக்னேஷ் ஒவ்வொரு ஊரிலும் தினந்தோறும் கிடைத்த கூலி வேலை செய்து கொண்டு அங்குள்ள கோயில், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் தங்கி வந்துள்ளார்.
அப்படி ஒருநாள் ஶ்ரீரங்கத்தில் கொத்தனாராக வேலை செய்து விட்டு கோயிலில் தங்கிய விக்னேஷுக்கு 40 வயதுடைய யாசகம் வாங்கும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த பெண் எனக்கு திருமணமாகி விட்டது. எனது கணவருக்கும், எனக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்து விட்டேன் என தெரிவித்துள்ளார். இதையடுத்து விக்னேஷ் தினந்தோறும் அந்த பெண்ணை சந்தித்து பேசி பழக்கி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் அந்த பெண் விக்னேஷிடம் நான் கர்ப்பமாக இருப்பதாகவும், அதைக் கலைக்க வேண்டும் எனக் கூறி ரூ.13 ஆயிரம் வாங்கி உள்ளார். அதன் பின் அந்த பெண்ணை காணவில்லை. விக்னேஷ், அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த பெண்ணை மீண்டும் சமயபுரத்தில் சந்தித்துள்ளார். அன்று இரவு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது அந்த பெண்ணிடம் பணம் என்ன ஆச்சு என்று விக்னேஷ் கேட்டபோது அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் அந்தப் பெண்ணின் சேலையால் கழுத்தை இறுக்கி விக்னேஷ் கொலை செய்து விட்டு முட்புதரில் உடலை வீசி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து பெண்ணை கொலை செய்ததாக விக்னேஷ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்