Rock Fort Times
Online News

தான் திருமணம் செய்ததை மறைத்து பெண்ணை ஆசை வலையில் வீழ்த்தி நகை-பணம் பறித்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது புகார்…!

திருச்சி, பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சித்ரா (32). இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழும் சித்ரா கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே அலுவலகத்தில் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த மனோஜ் என்பவரும் ஊழியராக வேலை பார்த்து வந்தார். திருமணமான மனோஜ், தனக்கு திருமணமாகவில்லை எனக் கூறி சித்ராவிடம் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இந்நிலையில் இருவரும் வேலை பார்த்து வந்த ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மனோஜ் தனியாக அலுவலகம் ஆரம்பித்து தொழில் செய்யலாம் அதற்கு பணம் இல்லை என சித்ராவிடம் கூறியுள்ளார். அதற்கு சித்ரா, தன்னிடம் இருந்த 3 பவுன் நகை மற்றும் 2 லட்சம் பணத்தை மனோஜிடம் கொடுத்துள்ளார். பின்னர், இருவரும் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே மாருதி நகரில் உள்ள அடுக்குமாடி வளாகத்தில் ரியல் எஸ்டேட் அலுவலகம் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் சித்ராவிடம் உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என மனோஜ் ஆசை வார்த்தை கூறி அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதற்கிடையில் மனோஜ் – சித்ராவின் உறவு குறித்து அறிந்த மனோஜின் மனைவி சித்ராவிடம் தகராறு செய்திருக்கிறார். மனோஜிற்கு ஏற்கனவே திருமணம் ஆனதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சித்ரா, தான் வேலைக்கு வரவில்லை என்னிடம் வாங்கிய நகை பணத்தை திருப்பி தருமாறு மனோஜிடம் கேட்டுள்ளார். அதற்கு மனோஜ் எதையும் திருப்பி தர முடியாது உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் நாம் உல்லாசமாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என கூறி மனோஜ் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சித்ரா, கொள்ளிடம் காவல் நிலையத்தில் மனோஜ் மீது புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சித்ரா கூறுகையில், எனக்கு திருமணம் ஆகி இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் எனக்கும், என் கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். நான் ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் வேலை பார்த்தபோது அதே அலுவலகத்தில் பணியாற்றிய மனோஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் வேலை பார்த்த அலுவலகத்தில் பிரச்சனை ஏற்படவே இருவரும் தனியாக ரியல் எஸ்டேட் அலுவலகம் திறந்து தொழில் தொடங்கினோம். அப்போது ஏற்கனவே திருமணமான மனோஜ், என்னிடம் எனக்கு திருமணம் ஆகவில்லை நான் உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் உன்னுடைய இரண்டு மகன்களையும் பார்த்துக்கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறினார். நான் என்னால் முடிந்த அளவுக்கு 3 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் பணம் கொடுத்து உதவி செய்தேன். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் அவருடன் நெருங்கி பழகினேன். ஆனால் அவர் ஏற்கனவே திருமணம் செய்ததை மறைத்து தன்னிடம் நகை, பணத்தை தொழிலுக்காக பெற்றுக்கொண்டார். நகை, பணத்தை தன்னிடம் திருப்பித் தருமாறு கேட்டதற்கு திருப்பி தர மறுத்ததோடு நாம் உல்லாசமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வருகிறார். இதுகுறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்