நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. அவரது மறைவிற்குப் பிறகு இந்த கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முதலில் உதகை போலீஸார் விசாரித்து சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கனகராஜ், சம்பவம் நடந்த சில நாட்களில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். பின்னர், இந்த வழக்கு மேற்கு மண்டல ஐஜி தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தினர். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், இந்த வழக்கு கோவை மாவட்ட சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. எஸ்.பி மாதவன், கூடுதல் எஸ்.பி.முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீஸார் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாவலர் வீரபெருமாள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக சந்தேகத்துக்குரியவர்கள், சாட்சிகள் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுத்த கோரிக்கை, அதுதொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், சந்தேகத்துக்குரிய 18 பேரிடம் போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜராகுமாறு ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.அதன்படி அவர் இன்று( மார்ச் 27) சிபிசிஐ போலீசார் முன்பு ஆஜரானார். கோடநாடு எஸ்டேட் வாங்கப்பட்ட சமயத்தில் அதன் பங்குதாரர்களில் ஒருவராக சுதாகரன் இருந்தார். அது தொடர்பாகவும், கோடநாடு எஸ்டேட்டில் இருந்த ஆவணங்கள், பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
Comments are closed.