தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் ராகுல் காந்தி எம்பி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செல்வப் பெருந்தகை, தனது வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்துவதாகவும், ராகுல்காந்தி கூட்டத்திற்கு தன்னை செல்ல விடாமல் வீட்டில் சிறை வைத்துள்ளதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அவரது இந்த குற்றச்சாட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், செல்வப்பெருந்தகை மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல்துறை ஆணையரிடம் வருமான வரித்துறையினர் புகார் அளித்துள்ளனர். அதில், “கடந்த 20ம் தேதி அவரது இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தித் தேர்தல் பணிகளைத் தடுக்க முயற்சிப்பதாக செல்வபெருந்தகை பொய்யான தகவல்களைப் பரப்பியுள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற வழக்கமான சோதனைகளுக்கும், செல்வபெருந்தகைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இருப்பினும் அவர் திட்டமிட்டு அவதூறு பரப்பியுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தேர்தல் ஆணையத்திலும் வருமான வரித்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.