வெளிநாட்டு வேலைக்கு சென்ற மனைவி என்ன ஆனார் என்று தெரியவில்லை?- மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் கணவர் மனு…!
திருச்சி, தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆரிஃப். இவரது மனைவி சபுரா பீ கடந்த ஆண்டு ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வீட்டு வேலை செய்ய சென்றுள்ளார். இந்நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர்கள் தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாக கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி சபுரா பீ தனது கணவரிடம் செல்போனில் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து புறப்பட்டு வந்து விடுமாறு கூறியிருக்கிறார். அதன்பின், சபுரா பீ- ஐ தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு மாதத்திற்கு மேலாக தன் மனைவி எங்கு உள்ளார், என்ன செய்கிறார் என்று தெரியாமல் ஆரிஃப் தவித்து வருகிறார். தன் மனைவியை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிய ஏஜெண்ட்டான இனாம்குளத்தூரை சேர்ந்த ரியாஸ் அகமது என்பவரை நாடியுள்ளார். அவர், மஸ்கட்டில் உள்ள ஏஜெண்ட்டான லிஸா என்பவரது எண்ணை தந்துள்ளார். அந்த எண்ணில் லிஸாவை ஆரிஃப் தொடர்பு கொண்டபோது ரூ.3.50 லட்சம் பணம் அனுப்பி வைத்தால் சபுரா பீ யை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறோம் என தெரிவித்துள்ளார். பணம் கொடுக்க வசதி இல்லாத ஆரிஃப் வெளிநாட்டில் தவிக்கும் தன் மனைவியை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
Comments are closed.