அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா:-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ரஜினிகாந்த் பாராட்டு…!
பள்ளி அளவில் கல்வி மற்றும் இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள், உலக அளவிலும், தேசிய அல்லது மாநில அளவில் புகழ் பெற்ற இடங்களுக்கும், கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய சுற்றுலாவுக்கு தமிழக கல்வித்துறை ஏற்பாடு செய்கிறது. ஆண்டுதோறும் தமிழக அரசு இதற்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு மாணவர்களும், ஆசிரியர்களும் கல்விச்சுற்றுலா சென்று வந்துள்ளனர். இந்நிலையில், 2023-24ம் ஆண்டுக்கான போட்டிகளில் வெற்றிபெற்ற 52 மாணவர்கள், ஐந்து நாள் பயணமாக பிப்ரவரி 23ம் தேதி மலேசியாவுக்கு புறப்பட்டனர். ஐந்து நாள் பயணத்தின்போது மாணவர்கள் பத்து மலை முருகன் கோவில், கேஎல்சிசி, கெந்திங் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்ல இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழியனுப்பி வைத்தார். இந்நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களை வெளிநாடு கல்வி சுற்றுலா அழைத்து செல்வதற்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நமது அரசுப் பள்ளி மாணவர்கள் 52 பேர் மலேசியா சென்றுள்ள நிலையில், அவர்களுடன் இணைந்து கொள்வதற்காக விமான நிலையம் சென்றபோது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தோம். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அரசுப் பள்ளி மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்கின்றோம். அவ்வகையில் இது 8-வது பயணம். தற்போது மலேசியா சென்றுள்ளார்கள். கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் முதன்முறையாக விமானத்தில் பயணிக்கிறார்கள். இதற்கு தனது ஸ்டைலில் வாழ்த்துகள் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார். “தங்களின் வாழ்த்துகளை மாணவர்களிடம் கொண்டு செல்கிறோம். அது அவர்களுக்கு ஊக்கமளிக்கும் என பதிவிட்டுள்ளார்.
Comments are closed.