மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்வு- நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம்…* திமுகவில் அதிரடி மாற்றம்..!
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் தலைமைச் செயற்குழு கூட்டம் இன்று(22-08-2026) தொடங்கியது. இக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, திமுக மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அவர்களின் அதிகபட்ச வயது 70ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநகரச் செயலாளர் என்ற பதவியே இனி கிடையாது. கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
1. கட்சியின் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக்கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.
2. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரகங்களிலும், சூழலுக்கு ஏற்ப பிற மாநகராட்சிகளிலும் வட்டக்கழகங்களை வலிமைப்படுத்திட கிளைக்கழகம் அமைக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர் கிளைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே இப்பொறுப்பை வகிக்க முடியும்.
3. சென்னை மாநகராட்சியின் வட்டக்கழகங்கள் சராசரியாக 10 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் சராசரியாக 5 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். மாநகர-நகர-பேரூர் வட்டக்கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.
4. பேரூர் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.
5. சென்னை மாநகராட்சியில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். பகுதிக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.
6. நகரக் கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகளைக் கொண்டிருக்கும். நகரக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.
7. சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.
8. வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. பிரிக்கும் போது ஒரு தொகுதி மட்டும் எஞ்சியிருப்பின் அதே வருவாய் மாவட்டத்தில் பொருத்தமான கழக மாவட்டத்துடன் மூன்றாவது தொகுதியாக இணைக்கப்படும். மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும். இனி மாநகரச் செயலாளர் என்ற பொறுப்பு இருக்காது.
9. 110 மாவட்டங்களை அறிவித்தவுடன், மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி 15 நாட்களுக்குள் ஒன்றியம்-நகரம்-பகுதி-வட்டக்கழகங்கள் பிரிக்கப்பட வேண்டும். தலைமைக்கழகத்தால் அனுப்பி வைக்கப்படும் பிரதிநிதி முன்னிலையில் மீண்டும் மாவட்ட செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு, பிரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு தலைமைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments are closed.