தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக துறைசார் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1.80 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச் சாளர முறையில் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் சேர 2.45 லட்சம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு அவர்களில் 2.36 லட்சம் பேர் தகுதி பெற்றனர். அவர்களது தரவரிசைப் பட்டியல் ஜூலை 1-ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, முதல்கட்டமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு பிரிவில் சிறப்பு பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள்) இணையவழி கலந்தாய்வு கடந்த 13, 14-ம் தேதிகளில் நடத்தப்பட்டது.
இந்நிலையில், பொறியியல் படிப்புக்கான இணையவழி பொதுக் கலந்தாய்வு இன்று( ஜூலை 20) தொடங்குகிறது. ஆக.30-ம் தேதி வரை இந்த கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடைபெறும். முதல் சுற்று கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் விரும்பும் கல்லூரி, பாடப் பிரிவை தேர்வு செய்ய இன்று காலை 10 மணி முதல் 22-ம் தேதி மாலை 5 மணி வரைஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு 24-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டும். அதை அவர்கள் 25-ம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு உறுதி செய்த மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை 26-ம் தேதி காலை 10 மணிக்கு இணையவழியில் வழங்கப்படும். இதேமுறையில்
2, 3-வது சுற்று கலந்தாய்வும் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் புருஷோத்தமன் தெரிவித்தார்.

Comments are closed.