திருச்சி பீமநகர் ஹீபர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் ஸ்டாலின். தனியார் நிதி நிறுவனத்தின் திருச்சி கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் திருச்சி கொட்டப்பட்டு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன், சுதா ஆகிய இருவரும் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்தநிலையில் இவர்கள், பாலாஜி என்கிற நபரை ஸ்டாலினிடம் அறிமுகப்படுத்தி அடகு வைக்கப்பட்ட அவரது 500 கிராம் தங்க நகைகளை மீட்டு இந்த நிதி நிறுவனத்தில் அடகு வைக்க பண உதவி செய்யுமாறு கேட்டுள்ளனர். இதை நம்பிய கிளை மேலாளர் ஸ்டாலின், ரூ.23 லட்சத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் அந்த பணத்தை மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்டாலின் கொடுத்த புகாரின்பேரில் பத்மநாபன், சுதா ஆகிய இருவர் மீது, கண்டோன்மெண்ட் குற்றப்பிாிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.