தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ள ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில், சட்டசபை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், தற்போது, தலைமை செயலக அதிகாரிகளுக்கு பயோமெட்ரிக், அல்லது முக அங்கீகார அடிப்படையில் வருகை பதிவு செய்யப்படும் என்ற புதிய விதி அமலுக்கு வர உள்ளது. இது, தமிழக தலைமை செயலக வரலாற்றில் முதல்முறையாகும். மேலும் இந்த நடவடிக்கை முதற்கட்டமாக மனிதவள மேலாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் என்றும், பின்னர் படிப்படியாக மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற திங்கட்கிழமை (ஜூன் 1) முதல் அனைத்து அதிகாரிகளும், பணியாளர்களும் பயோமெட்ரிக் அல்லது முக அங்கீகார முறை மூலம் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும். அனைத்து பணியாளர்களும் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்து, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவதோடு, பயோமெட்ரிக் முறையிலும் வருகையைப் பதிவு செய்ய வேண்டும். பணியில் இருக்கும்போது அனைத்து ஊழியர்களும் கண்டிப்பாக அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த முறை ஏற்கனவே சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், சில ஊழியர்கள் தெரிவித்த ஆட்சேபனைகள் காரணமாக, இதன் அமலாக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது சோதனை ஓட்டம் முடிவடைந்த நிலையில், தற்போது இந்த முறை முழுமையாக அமலுக்கு வர உள்ளது. இதற்கிடையில், தலைமைச் செயலகத்தின் மற்ற துறைகளும் வருகைப்பதிவு விதிகளைக் கடுமையாக்கியுள்ளன: உணவு மற்றும் கூட்டுறவுத் துறையில், பணியாளர்கள் அலுவலக நேரத்தைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊழியர்கள் காலை 9.50 மணிக்கும், அலுவலக உதவியாளர்கள் காலை 9.30 மணிக்கும் பணிக்கு வர வேண்டும் என்று அண்மையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.