கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அஜய் பாபு என்பவரது மகள் ஜெயந்தி (32). இவர், சென்னை செம்மஞ்சேரியில் வசித்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் துரைப்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பார்வையாளர்கள் அறை அருகே இருந்த நுழைவாயில் வழியாக ஜெயந்தி நைசாக தப்பி ஓடி விட்டார். மாலை 5.30 மணியளவில் கைதிகள் பதிவேட்டை சரிபார்த்த சிறை போலீசார், ஜெயந்தி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஜெயந்தி சிறையில் இருந்து தப்பித்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பெண் கைதி தப்பி ஓடிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.