Rock Fort Times
Online News

போதைப்பொருள் ‘கடத்தல் கிங்’ ஜாபர் சாதிக் கூட்டாளி சென்னையில் கைது…!

டெல்லியில் உள்ள ஒரு குடோனில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் பதுங்கி இருப்பதாக டெல்லி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில்
போதைப்பொருள் தடுப்பு காவல்துறை, டெல்லி சிறப்பு காவல்துறை நடத்திய சோதனையில் 50 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு ரூ. 2,000 கோடி எனவும் தெரிய வந்தது. மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் மூளையாக செயல்பட்டது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் என்பதும் தெரியவந்தது. அவரை டெல்லி போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த 09-03-2024 ம் தேதி ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதை பொருள் கடத்தல் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை திரைப்படத் தயாரிப்பு, கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட், ஹோட்டல் போன்ற பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளதும், இவருக்கு முக்கியப் பிரமுகர்கள் பலருடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.
அவரிடம், தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உணவுப் பொருட்களுடன் போதைப் பொருட்களை கலந்து கடத்தலுக்கு உதவிய ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதானந்தம் என்ற சதா என்பவரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னையில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்