தீபாவளி கடைசி கட்ட பர்ச்சேஸ்: மக்கள் வெள்ளத்தில் திருச்சி என்.எஸ்.பி.சாலை, சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து, ரயில் நிலையங்களில் முண்டியடித்த கூட்டம்…!
தீபாவளி பண்டிகை நாளை 31ந் தேதி வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் திருச்சி மலைக்கோட்டை என்.எஸ்.பி.ரோடு, சிங்காரத்தோப்பு, பெரியகடை வீதி, சின்ன கடைவீதி, சூப்பர் பஜார் மற்றும் அதனை சுற்றியுள்ள கடைகளில் காலை முதலே கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல கூட்டம் வந்த வண்ணம் இருந்தது. மாலை நேரத்தில் மக்கள் வெள்ளத்தில் மேற்கண்ட சாலைகள் சிக்கி திணறின. இங்கு திருச்சி மட்டுமின்றி அருகில் உள்ள கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகை தந்து தங்களுக்கு தேவையான துணி வகைகள், இனிப்பு வகைகள், பட்டாசுகள் போன்றவற்றை வாங்கிச் சென்றனர். இன்று இரவு நேர கடைகளும் செயல்பட உள்ளதால் அதிகாலை வரை கூட்டம் குறையாது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு மலைக்கோட்டை பகுதிகளில் 185 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நான்கு கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள், நகை, பர்ஸ் திருட்டு சம்பவத்தை தடுப்பதற்காக மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின்பேரில் பெண் போலீசார் சாதாரண உடையில் பணியில் உள்ளனர். மேலும், தற்காலிக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளை கண்காணித்தும், அவ்வப்போது போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தும் வருகின்றனர். மேலும், இன்று பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் வரும் என்பதால் சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், பாலக்கரை, தெப்பக்குளம், மார்க்கெட் பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் ஊருக்கு செல்ல தொடங்கி விட்டனர் .இதனால் ஜங்சன் ரெயில் நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம் மற்றும் 2 தற்காலிக பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
Comments are closed.