திருச்சி, நத்தமாடிப்பட்டியில் உள்ள குளத்தில் முதலைகள் நடமாட்டம்- அச்சத்தில் மக்கள்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி, நத்தமாடிப்பட்டி கிராமத்தை சுற்றி கீழக்குறிச்சி, முடுக்குப்பட்டி, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயம்தான் பிரதான தொழில். சிலர், கால்நடை வளர்ப்பிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த கிராமங்களை ஒட்டி விமான நிலையம் அமைந்துள்ளதால் விமான நிலைய விரிவாக்கத்திற்காக பெரும்பாலான பகுதிகள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் நத்தமாடிபட்டியில் உள்ள குளத்தை இப்பகுதி மக்கள் மற்றும் அருகில் உள்ள கிராம மக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். கால்நடைகள் தண்ணீர் குடிக்கவும் அழைத்து வருகின்றனர். அவ்வாறு அவர்கள் வரும்போது குளத்தில் முதலைகள் அங்கும், இங்குமாக சுற்றி வருவதை கண்டு திடுக்கிட்டனர். இதனால் குளத்துக்குள் இறங்கவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ஏற்கனவே, இந்த குளத்தில் ஒரு முதலை இருந்த நிலையில் தற்போது மேலும் இரு முதலைகள் இருக்கிறது. இதனால் குளத்திற்குள் இறங்கவே பயமாக இருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து குளத்தில் உள்ள முதலைகளை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Comments are closed.