திருச்சி மாவட்டத்தில் 38 முதல்வர் மருந்தகங்களை காணொளி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்- குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும்…!
ஏழை, எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவுத் துறை மூலம் தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று(24-02-2025) 1,000 முதல்வர் மருந்தகங்களை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் என மொத்தம் 1000 மருந்தகங்கள் திறக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் பெருவளப்பூர், துறையூர், உறையூர்-2, அரியமங்கலம், மன்னார்புரம், பெரியகடைவீதி, காட்டுப்புத்தூர், வடக்கு லட்சுமிபுரம், சுப்பிரமணியபுரம், ஸ்ரீரங்கம்,மேலபுலிவார்டு ரோடு, ரெங்கா நகர், சோமரசம்பேட்டை, டவுன் ஸ்டேசன் ரோடு, நெடுங்கூர், மேலகல்கண்டார் கோட்டை, கருங்குளம், வைரிசெட்டி பாளையம், காணக்கிளிய நல்லூர், துவரங்குறிச்சி, மேட்டுப்பாளையம், திருவெறும்பூர் மற்றும் லால்குடியில் தலா 2 மருந்தகங்கள், டைமண்ட் பஜார், வையம்பட்டி, குளித்தலை மெயின் ரோடு, காட்டூர், சமயபுரம், தில்லை நகர், கே.கே.நகர், துறையூர் மெயின் ரோடு, மணப்பாறையில்-2 மருந்தகங்கள் என 38 மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
திருச்சி கே.கே.நகர் மெயின் ரோடு மங்கம்மா சாலையில் அமைக்கப்பட்டுள்ள மருந்தகத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்ததும், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் குத்துவிளக்கேற்றினார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் துர்காதேவி மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான மருந்துகள் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. தேவை ஏற்பட்டால் வெளிச்சந்தையிலும் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த மருந்தகங்களில் வெளி மார்க்கெட் விலையை விட குறைந்த விலையில் மருந்துகளை வாங்கி பொதுமக்கள் பயனடையலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Comments are closed.