திருச்சி, ரயில்வே காலனி கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்தவர் முஹமது பாதுஷா. இவரது மனைவி கலைச்செல்வி. இந்த தம்பதியரின் மகன் ராகுல் (வயது 14). இவர் திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மார்ச் 28-ந் தேதி, விடுதியில் தங்கி இருந்த ராகுல் மீது, பள்ளி தலைமை ஆசிரியர் ஜஸ்டின் திரவியம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ராபின்சன் ஆகியோர் ஒரு திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அங்குள்ள ரூமில் அடைத்து வைத்து கிரிக்கெட் மட்டையால் மாணவனை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் மாணவன் தெரிவித்துள்ளான். இதுகுறித்து பொன்மலை போலீசில் கலைச்செல்வி கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், தலைமை ஆசிரியர் ஜஸ்டின் திரவியம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ராபின்சன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.