லால்குடி அருகே சாத்தமங்கலம் அரண்மனைமேடு பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் பஞ்சவர்ணம் தம்பதியின் மகன் சரவணன் (வயது 19). இவர் குமுளூர் அரசு கலைக் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சரவணன் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் ரியாஸ் (15), ஸ்ரீதர் மகன் தருண் (16), தவமணி மகன் பிரகதீஸ் (19), சிவக்குமார் மகன் சுரேந்தர் (16) ஆகியோருடன் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள்புரம் கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றார்.
அவர்களில் ரியாஸ் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார் இதனால் சுழலில் சிக்கி உயிருக்கு போராடினார். இதை கண்ட சரவணன் துணிச்சலாக சென்று ரியாசை காப்பாற்றினார். ஆனால் சரவணன் புதை மணலில் சிக்கி ஆற்று தண்ணீரில் மூழ்கினார்.
இதை கண்ட நண்பர்கள் உடனடியாக லால்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சரவணனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து படகு மூலம் மாணவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
