Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி அழியப்போவது உறுதி:- அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி விலகல்…!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது.
இந்தநிலையில் தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதிமுக- பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி சிறுபான்மை மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமிய நிர்வாகி ஒருவர் அதிமுகவில் இருந்து விலகி உள்ளார். தற்போது அதிமுகவுடனான கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள எஸ்டிபிஐ கட்சி, பாஜக கட்சியுடன் கூட்டணி வைத்த எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் கூறுகையில், பாஜக கூட்டணிக் கட்சிகளை எஸ்டிஐ கட்சி அங்கீகரிக்காது. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்பதே பாஜகவின் முழக்கமாக இருந்தது. ஆனால் திராவிட கட்சி மேலே சவாரி செய்ய வந்திருக்கிறார்கள்.இப்போது முழக்கம் எங்கே போனது? அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க எவ்வளவு பெரிய நிர்ப்பந்தம் கொடுத்து நேரம் கொடுத்து எத்தனை வாய்ப்புகள் கொடுத்தார்கள் என்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரியும். பாஜகவுக்கு இது கைவந்த கலை. தனக்கு கட்டுப்பட்டுத்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவார்கள். நீதி, நேர்மை, நியாயம் அனைத்தையும் துறந்து சாணக்கிய தத்துவ அடிப்படையில் அதிமுகவை கபளிகரம் செய்திருக்கிறார்கள்.
பாஜகவை பொறுத்த வரையில் தனக்குச் சாதகமாக வேண்டுமென்றால் யார் காலிலும் விழுவார்கள். தனக்குத் தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள் அதுதான் அவர்களின் நிலைப்பாடு. எங்கெல்லாம் பாஜக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருக்கிறதோ அங்கு இருக்கக்கூடிய மாநிலக் கட்சிகளுடன் அழிந்து போனதாகத் தான் வரலாறு இருக்கிறது. அதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கிறது. அந்த வழியில் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி அழியப்போவது உறுதி. பாஜகவுடனான கூட்டணி முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து கதவுகளையும் சாத்திவிட்டதால் வாசலில் காத்து கிடந்தார்கள், எந்த வாசலாவது, எந்த ஜன்னலாவது திறக்காதா? என பாஜகவினர் தவம் கிடந்தார்கள். இப்போது நிர்ப்பந்தம் நெருக்கடியில் கூட்டணியை நோக்கி மிதந்து கொண்டிருப்பது தெரிகிறது. எனவே, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி கட்சியையும் தொண்டர்களைப் பாதுகாக்க வேண்டும். பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும் என்றார். நாங்கள் நிச்சயமாக ஒரு கூட்டணிக் கட்சியில் இருப்போம், எந்த கட்சி என்பது குறித்து 9 மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என்று அபூபக்கர் சித்திக் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்