சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று ( 19.06.2023 ) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளில்தான் விதிமீறல்கள் கண்காணிக்கப்படுகிறது. ஆனால், இடைப்பட்ட பகுதிகளிலும் பலர் விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். அதுபோன்ற குற்றங்களைக் கண்காணித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மிக வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களைக் கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கிறது. அதிவேகமாக இரவு நேரங்களில் வாகனங்களை இயக்குவதால், விபத்துகளும் நடக்கின்றன. எனவே, பகல் நேரங்களில் மணிக்கு அதிகபட்சமாக 40 கி.மீட்டர் வேகத்திலும், இரவு நேரங்களில் 50 கி.மீட்டர் வேகத்திலும் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படும். வேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய 10 இடங்களில் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு, தானியங்கி கருவி மூலம் விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு சலான் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து துறையில் வேக கட்டுப்பாடு ஆணை உள்ளது. அதை அடிப்படையாக கொண்டுதான். வாகனங்களை இயக்குவதற்கான வேகம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.