கோடை விடுமுறை முடிந்து 6- முதல் 12 -ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று ( 12.06.2023 ) திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த மாணவர்கள் இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டனர். இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் இன்று பள்ளிக்கு வருகை தந்த மாணவ – மாணவிகளை வாழ்த்துகிறேன். 8,340 நடுநிலைப் பள்ளிகள், 3,547 உயர்நிலை மற்றும் 4221 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 16,108 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 46,22,324 மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரவுள்ளனர். அரசுப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 1. 31 லட்சம் குழந்தைகள் சேர்ந்துள்ளனர். 6-12-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இலக்கு வேண்டும். புதிய பஸ் பாஸ் வழங்குவது குறித்து போக்குவரத்து துறையுடன் பேசி முடிவெடுக்கப்படும். பள்ளி சீருடையில் இருந்தாலே பஸ்சில் இலவசமாக பயணிக்க அனுமதி உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.