சென்னை, தியாகராயநகரில் செயல்படும் தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி, ரூ.100 கோடி வரை பணம் வசூலித்து மோசடி நடந்துள்ளது என்றும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தி.மு.க. பிரமுகரான பி.டி.அரசகுமாரும், அவரது உறவினர்களான ஆரோக்கியராஜ், சுரேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பி.டி.அரசகுமார் தனியார் பள்ளிகளின் சங்க நிர்வாகிகளை சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்தும், போரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்தும் சந்தித்து, பணம் வசூலித்ததாக தெரியவந்தது. அதன் அடிப்படையில்தான் அவர் கைது செய்யப்பட்டார். அவர் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், இதுவரை 177 பேர் புகார் கொடுத்துள்ளனர். 250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 61 வங்கிக்கணக் குகள் முடக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்கில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் கொடுக் கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது, லஞ்ச ஊழல் வழக்காக மாற்றப்பட் டுள்ளது. திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை, திருச்சியில் 9 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இதில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் ஆகியவற்றுடன் சேர்த்து வழக்கு சம்பந்தமாக 118 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 18 செல்போன்கள், 3 மடிக்கணினிகள், 8 பென்டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர். சோதனை முடிவில் 18-ந்தேதி (அதாவது இன்று) விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு போலீசார் சம்மன் வழங்கி இருந்தனர். அதன்படி, வழக்கு விசாரணைக்காக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் அன்பில் மகேஷ் இன்று ஆஜரானார். அவரிடம் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.