வீடுகள் கட்டும் திட்டத்தின் பெயர் மாற்றம் மற்றும் நிதி ஒதுக்கீடு:* ஐ.பெரியசாமி-அமைச்சர் ஆனந்த் காரசார விவாதம்…!
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில், ஊரகப் பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தின் பெயர் மாற்றம், நிதி ஒதுக்கீடு மற்றும் வீடுகளின் எண்ணிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அமைச்சர் ஆனந்த் ஆகியோருக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. கிராமங்களில் கலைஞர் கனவு இல்லம்/வீடு வழங்கும் திட்டமாக இருந்ததை, தற்போது ‘வெற்றி வீடு கட்டும் திட்டம்’ என்று மாற்றியுள்ளீர்கள். மேலும், ஒரு வீட்டிற்கு வழங்கப்படும் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளீர்கள். வீடு ஒன்றுக்கான நிதியை உயர்த்தினாலும், ஆண்டிற்கு கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கையை 70,000 ஆகக் குறைத்திருக்கிறீர்கள். இதனால் மொத்தம் ரூ.3,500 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முந்தைய ஆட்சியில் ஆண்டுக்கு 1 லட்சம் வீடுகள் கட்ட அனுமதிக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போதைய
ஆட்சியில் ஆண்டிற்கு 70,000 வீடுகள் வீதம் கட்டினால், 5 ஆண்டுகளில் சுமார் 3.5 லட்சம் வீடுகளை மட்டுமே கட்ட முடியும். இதனால் அரசு நிர்ணயித்த 8 லட்சம் வீடுகள் என்ற இலக்கை எப்படி அடைய முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் ஆனந்த் பதிலளிக்கையில், முந்தைய திட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகளைக் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், களத்தில் ஆய்வு செய்தபோது பல இடங்களில் வீடுகள் கட்டப்படாமல் வெறும் அடித்தளத்துடன் அரைகுறையாக நின்றிருந்தன. முன்பு வழங்கப்பட்ட 3 லட்சம் நிதி, மக்கள் புதிய வீடு கட்டி முடிப்பதற்குப் போதுமானதாக இல்லை என்பதால் அவர்கள் சிரமப்பட்டனர்.
இப்பிரச்சினையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து, வெறும் எண்ணிக்கையை (1 லட்சம், 2 லட்சம் என) அதிகரிப்பதை விட, ஒதுக்கப்படும் நிதி மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு வீட்டிற்கான தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்தது. மக்கள் முழுமையாக வீடுகளைக் கட்டி முடிக்க வேண்டும் என்ற நோக்கில், முதற்கட்டமாக தற்போது 70,000 வீடுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.

Comments are closed.