நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம்: நீதிமன்றங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லையா? சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட சுற்றறிக்கையால் சர்ச்சை..!
இந்தியா முழுவதும் நாளை(15-08-2026) சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில்
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நடைபெறவிருக்கும் சுதந்திர தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது குறித்து உயர் நீதிமன்றப் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் எந்தத் தகவலும் குறிப்பிடப்படாதது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மத்திய அரசின் ‘ஹர் கர் திரங்கா 2026’ பிரச்சாரத்தின் கீழ், ‘வந்தே மாதரம்’ பாடல் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் இப்புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் ஜெனரல் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையின்படி, விழாவின் தொடக்கத்தில் ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்படும், அதைத் தொடர்ந்து தேசியக் கொடி ஏற்றப்பட்டு, நிறைவாக தேசியக் கீதம் பாடப்படும் என நிகழ்வுகளின் வரிசை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணைப்படி மாநில அரசு நிகழ்ச்சிகளில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ கட்டாயமாக்கப்பட்டு முதலிடம் அளிக்கப்பட்டு வரும் நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்தச் சுற்றறிக்கையில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.