பாஜகவுடன் திமுக நெருக்கம் காட்டுகிறதா? நாடாளுமன்ற சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற கனிமொழி எம்.பி…!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நிலையில், இரு அவைகளிலும் இன்றுடன் (13-08-2026) நிறைவடைந்தது. புது டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறை தாக்குதலுக்கு அனுமதி அளித்தது யார்? எனவும், ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரம் குறித்தும் கேள்வியெழுப்பி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மக்களவை கூட்டத்தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து, அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் வழக்கம்போல் அவை தலைவர்( சபாநாயகர்) ஓம் பிர்லா தேநீர் விருந்தளித்தார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றனர். இந்த விருந்துக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பிக்கள் புறக்கணித்தனர். ஆனால், இந்தியா கூட்டணியிலிருந்து விலகியுள்ள திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கலந்து கொண்டார். பாஜகவுடன் திமுக நெருக்கம் காட்டி வருவதாகவும், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மசோதாக்களை திமுக உதவியுடன் பாஜக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தேநீர் விருந்தில் கனிமொழி கலந்துகொண்டிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.