திமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு தமிழக நெடுஞ்சாலைத்துறையில் சாலைகளை அமைக்காமலேயே, அமைத்ததாகக் கூறி பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். மேலும் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும், 40 லட்சம் ரூபாய் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கு விசாரணை தொடர்பாக இன்று(03-07-2026) லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் எ.வ.வேலு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்பாக எ.வ.வேலு ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். அப்போது எ.வ.வேலு சார்பாக லஞ்ச ஓழிப்பு போலீசாரிடம் கடிதம் ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் தனது உடல்நிலை பாதிப்பு காரணமாக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தன்னால் விசாரணையில் ஆஜராக முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து சென்னை வந்ததும் விசாரணைக்கு ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.