Rock Fort Times
Online News

சாலை அமைக்காமலேயே அமைத்ததாக கூறி 3.23 கோடி முறைகேடு:* முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு…!

கடந்த திமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் எ.வ.வேலு. நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மீது கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைதுறையில் சாலை பணிகள் மேற்கொள்ளப்படாமல் 3.23 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், இன்று(25-06-2026) லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், எ.வ.வேலு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 13 இடங்களில் அதிரடி சோதனைநடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கடந்த 2022ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகாரில், மாநில நெடுஞ்சாலை துறையின் திட்டத்தின் கீழ் கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சில சாலை பணிகளில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அப்பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், முடிந்ததாக போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, ஒப்பந்த நிறுவனத்திற்கு அரசு பணம் வழங்கப்பட்டதாகவும், பின்னர் ஆதாரங்களை மறைக்கும் வகையில் அவசர அவசரமாக சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு விரிவான விசாரணை நடத்தினர். அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில இந்த முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கில், எ.வ.வேலு மற்றும் 11 அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்