பூதாகரமாகும் கோஷ்டி அரசியல்; திருச்சி மாநகர த.வெ.க.பிரமுகரின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்…* நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார்!
திருச்சி மாநகர் மாவட்ட அமமுகவில் காந்தி மார்க்கெட் பகுதி செயலாளராக பொறுப்பு வகித்தவர் வேதாத்ரி நகர் பாலு. இவர் கடந்த மாதம் அமமுகவிலிருந்து விலகி த.வெ.கவில் தன்னை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து திருச்சி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கரிகாலனுடன் இணைந்து கட்சிப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கரிகாலனுடன் இணைந்து கட்சிப் பணிகளில் ஈடுபடக்கூடாது எனக்கூறி திருச்சி மாநகர த.வெ.கவினர் 7 பேர் பாலுவின் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து வீடுதேடி வந்து கொலை மிரட்டல் விடுத்த த.வெ.கவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிசிடிவி ஆதாரங்களுடன் திருச்சி வடக்கு மாநகர காவல் துணை ஆணையரகத்தில் பாலு புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ” தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நான் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயால் ஈர்க்கப்பட்டு த.வெ.கவில் என்னை இணைத்துக் கொண்டேன்.
மாவட்ட பொறுப்பாளரான கரிகாலனைத் தவிர திருச்சி கிழக்குத் தொகுதிக்கு இன்னும் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. எனவே கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு மாவட்ட பொறுப்பாளருடன் இணைந்து கட்சி வேலைகள் செய்து வருகிறேன். இந்நிலையில் வருகிற ஜூன் 22ம் தேதி தமிழக முதல்வரும், த.வெ.க தலைவருமான விஜய்க்கு 52வது பிறந்தநாள். இதுதொடர்பான கட்சியினர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டிருந்தேன். அப்போது நிர்மல், சதீஷ், சௌகத், சுதாகர், கோபி உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் மது போதையில் திடீரென எனது வீட்டிற்கு வந்து எனது மனைவியிடம் கட்சியின் சீனியர் நிர்வாகிகளான எங்களை மதிக்காமல் உனது கணவர் கட்சியில் செயல்பட்டு வருகிறார்.
இதே நிலை நீடித்தால் கொலை செய்து விடுவோம். மரியாதையாக இருக்கச்சொல் என மிரட்டி சென்றுள்ளனர். இந்த தகவல் எனக்கு தெரியவந்ததையடுத்து இதுகுறித்த சிசிடிவி ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளேன். கட்சியின் பொதுச்செயலாளரான அமைச்சர் புஸ்ஸி.ஆனந்திடமும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அவரும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்றார்.

Comments are closed.