துவரங்குறிச்சியில் ஓடும் பேருந்தில் குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாயத்தை திருட முயன்ற பெண் வசமாக சிக்கினார்…!
திருச்சி மாவட்டம், பிடாரபட்டியைச் சேர்ந்த பெருமாள் மனைவி ராகினி. இவர் தனது ஒரு வயது குழந்தை மற்றும் தங்கை கலைமதி ஆகியோருடன் மணப்பாறைக்கு சென்று விட்டு மீண்டும் துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தை வந்தடைந்தார். பின்னர் அரசு பேருந்தில் ஏறி பிடாரபட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பின்னால் நின்று கொண்டிருந்த
பெண் ஒருவர் ராகினியின் குழந்தை கழுத்தில் அணிந்திருந்த தங்கத் தாயத்தை கட்டிங் பிளேடு மூலம் அறுத்துள்ளார். இதனை கவனித்த ராகினியின் தங்கை கலைமதி கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அருகில் இருந்த பயணிகள் அந்த மூதாட்டியை பிடித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த மூதாட்டியிடம்
போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் தஞ்சை கோரிகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி செல்வி( 65) என்பதும், இவர் மீது பல காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது . இதனை அடுத்து ராகினி கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Comments are closed.