சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சேலம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு உணவு சாப்பிட்டு உணவு தரத்தை ஆய்வு செய்தார். பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினரிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் தனது உடல்நல பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார். குறிப்பாக தோள்பட்டை வலி சரியவதற்காக ஸ்கேன் எடுத்து பின்னர் பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கூறுகையில், “போக்குவரத்து துறையில் என்னென்ன குறைகள் உள்ளது. அனைத்தையும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று அதை தீர்த்து வைப்போம். ஒவ்வொரு குறைகளாக கேட்டறிந்து அதை தொகுத்து முதல்வரிடம் கொடுத்து அதை நிறைவேற்றுவோம் அதை நிச்சயம் செய்து கொடுப்போம். அனைத்து துறை அமைச்சர்களும் ஓய்வு இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம்; இது மக்களுக்கான ஆட்சி. இதுவரை எப்படி இருந்ததோ தெரியாது. நான் அமைச்சராக இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளேன். ஒவ்வொருவரும் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். நல்லமுறையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அது குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார்” என்றார்.

Comments are closed.